"மடி" என்னும் பெயரில் வங்களா விரிகுடாவில் சூறாவளி

வங்காள விரிகுடாவில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட தாழமுக்கமானது தற்போது அயன மண்டல சூறாவளியாக வலுவடைந்துள்ளது என வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால் பிரேரிக்கப்பட்ட “மடி” எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


இது தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்திலும், திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 370 கிலோமீற்றர் தூரத்திலும் சென்னையிலிருந்து தென்கிழக்காக 500 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இச்கூறாவளி, இலங்கையை விட்டு அப்பால் இந்தியாவை நோக்கி வடக்குத் திசையில் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மிகவும் வலுவான சூறாவளியாக மேலும் வலுவடைந்து வடக்கு-வடகிழக்குத் திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தினால் காற்றுடனான காலநிலை நாட்டிலும் சூழவுள்ள ஆழ்கடல் பிரதேசங்களிலும் முக்கியமாக மத்தியமலைப் பிரதேசத்தின் கிழக்கு சரிவுகளிலும் காணப்படும்.

வடக்கு, கிழக்கு, வடத்திய மாகாணங்களின் பல இடங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் நாட்டின் அனேகமான பகுதிகளில் இடியுடன்கூடிய மழை காணப்படும் என வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார்.

கடல் பிராந்தியங்களில் காற்றுடன்கூடிய மழை கொண்ட காலநிலை காணப்படும். முக்கியமாக பொத்துவில் முதல் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஊடான மன்னார் வரையான ஆழ்கடல் பகுதிகளில் காற்றுடன்கூடிய மழை கொண்ட காலநிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 கிலோமீற்றர் முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசும். இந்தக் காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும்.
இதனால் இந்தக் கடல் கிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் அபாயகரமானதாகவும் இருக்கும். ஏனைய ஆழ்கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார்.

Previous Post Next Post