வெள்ளத்தில் மூழ்கிய சித்தாண்டி (Photos)

சித்தாண்டியின் பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வந்த மழை மற்றும் உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகள் திறக்கப்பட்டமை போன்றவற்றினால்  தொடர்ச்சியாக வெள்ள நீர் அதிகரிக்கத் தொடங்கியது.   


சித்தாண்டி 04 இல் அடங்குகின்ற உதயனமூலை, மதுரங்காட்டு கொலனி ஆகிய பகுதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக சித்தாண்டி 04 கிராம அபிவிருத்தி சங்கக் கட்டடத்திற்கு முன்னாலுள்ள வளைவு வீதியில் சுமார் 7 அடி வரையிலான நீர் காணப்படுவதுடன், உதயன்மூலை பாலர் பாடசாலை முன்வீதியில் சுமார் 4 அடி வரையிலான நீரும், சித்தாண்டி 04 பழைய சந்தை வீதியில் 6 அடிவரையிலான நீரும் காணப்படுகின்றது. சில உள் குறுக்கு வீதிகள் 6 அடிக்கு மேற்பட்ட நீரைக்கொண்டும் காணப்படுகின்றன. 

சித்தாண்டி 03 மாரியம்மன் ஆலயத்தை அண்டிய பகுதி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு நீரினுடைய மட்டம் 6 அடிக்கு மேல் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்தாண்டி 02, சித்தாண்டி 01 மற்றும் மாவடிவேம்பு ஆகிய கிராமங்களும் பகுதியளவில்  வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 

சித்தாண்டி 04, 03 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்து தற்போது பாடசாலை, பொதுச்சந்தை மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். சில குடும்பங்கள் தத்தமது வீடுகளில் உள்ள மேல்தளங்களில் அல்லது பரண் அமைத்து தொடர்ந்தும் தமது உறைவிடங்களிலே தங்கியுள்ளனர். 

வீீடுகளிலே வளர்க்கப்பட்ட நாய்கள் உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டவை தவிர  ஏணையவை உயிரிழக்கும் நிலையிலும், குளிரில் நடுங்கிய நிலையிலுமத் காணப்படுவதுடன், ஒரு சில இடங்களில் நாய்கள் உயரிழந்து மிதப்பதனையும் காணமுடிகின்றது. 

குறிப்பிட்ட பகுதிகளின்  மலசலகூடங்களின் கழிவு நீர் மற்றும் இன்னோரன்ன கழிவுகள் நீரில் கலந்திருப்பதனாலும், கிணறுகளை மேவி வெள்ள நீர் காணப்படுவதனாலும் தூயநீரைப் பெறுவதில் வெள்ளப்பிரதேசத்தில் தங்கியுள்ள குடும்பங்கள்  சிக்கலை எதிர்நோக்கியுள்ளதுடன், தொலைவிலிருந்து நீரை எடுத்து வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை கிராம உத்தியோகத்தர்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொள்வதற்கு தயாராகியுள்ளனர்.










































Previous Post Next Post